தினகரன் 05.12.2013
கழிவுநீர் குழாய்களில் வலை பொருத்தும் பணி
புதுச்சேரி, : புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஜெ.ஜெ.நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் குழாய்களுக்கு கொசு வலை பொறுத்தும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் முனுசாமி, உதவி திட்ட அதிகாரி இரிசன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி பொன்விழா நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உழவர்கரை நகராட்சியில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜெ.ஜெ.நகரில் கழிவு நீர் குழாய்களில் கொசு வலை பொறுத்தும் பணியை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தும் பணி துவக்கப்பட்டது. இதே போன்று புதுவையின் அனைத்து பகுதிகளிலும் இப்பணி மேற்கொள்ள உள்ளது.