தினமணி 10.12.2013
ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம்
தினமணி செய்தி காரணமாக, ஓமலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் அரைக்கால் சட்டை அணிந்து பணியாற்றுவது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மையப்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஓமலூர் பேரூராட்சி நிர்வாகம் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரைக்கால் சட்டை என்ற நிலையிலிருந்து, முழுக்கால் சட்டை (பேண்ட்) என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஏற்காடு இடைத் தேர்தல் முடிவுற்ற நிலையில், திங்கள்கிழமை முதல் துப்புரவுப் பணியாளர்கள் புதிய சீருடையை அணிந்து பணியைத் தொடங்கினர்.
எனினும் பெரும்பாலான இடங்களில் துப்புரவுப் பணியாளர்கள் வெறும் கைகளாலேயே கழிகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
துர்நாற்றம் வீசும் குப்பைகளை அள்ளும் போது, பாதுகாப்பு முகக் கவசம், கையுறை, கால்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு முழங்கால் வரையிலான காலணிகள் இல்லாததால் காலால் குப்பையை ஒன்று சேர்த்து வெறுங்கைகளாலேயே அள்ளி நகரத்தை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் நகரத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்து கொடுப்பதுடன் சுகாதாரம், பணி பாதுகாப்பும் வழங்கினால் மேலும் திறம்பட பணியாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.