Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினத்தந்தி               09.01.2014

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

பிரசவித்த பெண்களுக்கு உடைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு துணிகள் வழங்கும் திட்டம் மாநகராட்சி மருத்துவமனைகளில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு மாதத்திற்கு 1,540 பிரசவங்கள் நடக்கிறது. இதில் தனியார் மருத்துவமனைகளில் 1000 பிரசவங்களும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் 400 பிரசவங்களும், மாநகராட்சி மருத்துவமனைகளில் 150 பிரசவங்களும் ஆகிறது.

மாநகராட்சி மருத்துவனைகளில் பிரசவ சதவீதம் 11 ஆக உயர்ந்துள்ளது.

புதிய திட்டம் தொடக்கம்

கோவை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்துக்காக தாய்மார்கள் அனுமதிக்கப்படும்போது, 3 நாட்களுக்கு காலையில் பால், ரொட்டி, மதியம் முட்டையுடன் சாப்பாடு, இரவு டிபன் ஆகியவை வழங்கப்படுகிறது.

தற்போது புதிய திட்டமாக பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், 6 பேபி நாப்கின்கள், ஒரு கொசுவலை, தாய்மார்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் ஒரு பேபி டவல் உள்பட ரூ.631 மதிப்புள்ள பொருட்களை வழங்கப்பட உள்ளன.

இதற்கான திட்ட தொடக்க விழா புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவ மையத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் லதா, சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டம் குறித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து நகர்நல மையத்துக்கும் இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

ரூ.50 லட்சம் வசதிகள்

சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் கர்ப்பிணி பெண்களுக்கான அறுவை சிகிச்சை மையம், ஸ்கேனிங் கருவி, எக்ஸ்ரே கருவிகள் பொருத்தும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல பகுதிகளிலும் ஸ்கேன் வசதி மற்றும் எக்ஸ்ரே கருவி மையங்கள் கர்ப்பிணி பெண்களுக்காக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 5 மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, மாநகராட்சி குழு தலைவர்கள் தாமரைச்செல்வி, சாந்தாமணி, அம்மன்அர்ஜுனன், செந்தில்குமார், வக்கீல் ராஜேந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு , மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் அருணா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.