தினமணி 2.11.2009
அ.வல்லாளபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடக்கம்
மேலூர், நவ. 1: அழகர்கோவில் அருகே உள்ள அ.வல்லாளபட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுகாதாரத் துறை மாவட்ட துணை இயக்குநர் ஏ.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்குமாறு தமிழக அரசை 25 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்காக 3.85 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் நிதி திரட்டி அரசுக்கு வாங்கிக் கொடுத்தனர். கட்டடம் கட்டுவதற்காக ரூ.10,000 டெபாசிட்டும் செய்திருந்தனர். இருந்தும் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான மு.க.அழகிரியிடம், பொதுமக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். தேர்தல் பிரசாரத்தின்போது இதை நிறைவேற்றித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி சனிக்கிழமை இரு மருத்துவர்கள், இரு செவிலியர் மற்றும் உதவியாளருடன் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முறைப்படி துணை இயக்குநரால் தொங்கி வைக்கப்பட்டது. இதில் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பேரூராட்சித் தலைவர் ரகுபதி, ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாகத் தெரிவித்தார்.