தினமணி 4.11.2009
மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
சேலம், நவ. 3: சேலம் மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, சாலையோரங்களில் கிடந்த டயர்களை துப்புரவுப் பணியாளர்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையே மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தாலும், கொசுக்களினாலும் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகரித்து,நோய்கள் மேலும் அதிகளவில் பரவக் கூடும் என்பதால் கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் வின்சென்ட், அப்சரா தியேட்டர் சாலை, செர்ரி ரோடு, தாதுபாய்குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
இதேபோல் சாலைகள், வீடுகளின் அருகில் கிடந்த டயர்களை துப்புரவுப் பணியாளர்கள் கைப்பற்றி வேனில் ஏற்றிச் சென்றனர். மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.இந்த பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.