தினமணி 6.11.2009
நாமக்கல்லில் கலப்பட டீ தூள் ஆலைக்கு சீல்
நாமக்கல், நவ. 5: நாமக்கல்லில் இயங்கி வந்த கலப்பட டீ தூள் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ஆட்சியர் உத்தரவால் சீல் வைக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டீ கடைகள், ஹோட்டல்கள், உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் சகாயம் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரன் மற்றும் நகராட்சி, வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர். பெரும்பாலான டீ கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூள் கலப்படமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டீ கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தியதில் நல்லிபாளையம் அருகேயுள்ள டீ தூள் கிடங்கில் இருந்து கொள்முதல் செய்வது தெரியவந்தது.உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற வருவாய்த்துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டனர்.
வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உரிமையாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்ற அலுவலர்கள் அறைகளில் சோதனை நடத்தினர். 2 மூட்டைகளில் டீ தூளும், 2 மூட்டைகளில் கலப்படம் செய்வதற்கான டீ தூள் நிறத்தில் உள்ள பொடியும் இருந்தது. மேலும், இவற்றை பல்வேறு பெயர்களில் பேக்கிங் செய்வதற்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள், அட்டைப் பெட்டிகளும் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து வீட்டுக்கு சீல் வைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
வீட்டை வாடகைக்கு எடுத்து கலப்பட டீ தூள் தயாரித்து வந்த களங்கானியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்தி ஆகிய பகுதிகளில் நடந்த சோதனைகளில் காலாவதியான பொருள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள், பொட்டல பொருள்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.