மாலை மலர் 10.11.2009
வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை: மேயர் தேன்மொழி உத்தரவு
மதுரை, நவ. 10-
வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கல்பாலம் மற்றும் ஆரப்பாளையம் தரைவழி பாலங்களை மேயர் தேன்மொழி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகரில் சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மதுரை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றில் மழைநீர் தடையின்றி செல்வதற்கு ஏதுவாக ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை மாநகராட்சி மற்றும் தனியார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெள்ளநீர் தடுப்பதற்கு மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளது வெள்ள அபாயம் ஏற்பட்டால் வைகை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தங்க வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்காவண்ணம் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற் காக அந்தந்த மண்டல ஆணையாளர்கள் தலைமை யில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும். சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி போடுதல், மருத்துவக்குழு அமைத்தல், நடமாடும் வகை யில் மருத்துவ வாகனம் என முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் (தெற்கு) தேவதாஸ், கவுன்சிலர் மகேஸ்வரிபோசு ஆகியோர் உடன் இருந்தனர்.