தினமணி 12.11.2009
கும்மிடிப்பூண்டி நகராட்சியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை
கும்மிடிப்பூண்டி,நவ. 11: பலத்த மழை காரணமாக தொற்று நோய் பரவாமல் இருக்க கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செவ்வாய்க்கிழமை முதல் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக பெய்த அடை மழையின் காரணமாக கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தொற்று நோய் பரவாமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கே.என்.பாஸ்கர் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார், துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன்படி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீதிகளை சுத்தம் செய்து, தெருக்கள் மற்றும் கழிவுநீர் சாக்கடையில் கொசு மருந்து அடிக்க பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பஸ் நிலையம், ஜி.என்.டி.சாலை மற்றும் 15 வார்டுகளில் சுத்தம் செய்து, தெருக்கள் மற்றும் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
அதோடு பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து மக்களும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை குடிக்கும்படி வீதிவீதியாக தண்டோரா போடப்பட்டது. அதே போல குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக பேரூராட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கும்படி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.