Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடுகளுக்குள் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி 16.11.2009

வீடுகளுக்குள் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கை

அரியலூர், நவ. 15: அரியலூர் பகுதியில் சனிக்கிழமை பெய்த பரவலான மழையால் செட்டி ஏரி, குறிஞ்சான் குள ஏரி, ஐயப்பன் ஏரி, சித்தேரி, பள்ளேரி உள்ளிட்ட 5 ஏரிகள் நிரம்பின. இதனால், ஏரிகளுக்குச் செல்லும் வாய்க்கால்கள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.

அரியலூர் நகராட்சியிலுள்ள செட்டி ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து, ஏரிக்கு வரும் மழைநீரை கல்லங்குறிச்சி வழியாகச் செல்லும் வாய்க்கால்கள் மூலம் ஐயப்பன் ஏரிக்கும், சித்தேரிக்கும் திருப்பிவிட நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மழைநீர் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டது. இதனால் எம்.ஜி.ஆர். நகர், அரசு குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டது.

இதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வழியாக வருகிற கால்வாய், ஐயப்பன் ஏரி அருகே தேங்கியதால், பெரியத் தெரு, கோ.சி. நகர், தெற்கு தெரு, சடையப்பர் தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், கால்வாயில் இருந்த அடைப்புகளை சரி செய்தும் மணல் மூட்டைகளை தண்ணீர் வெளியேறாத வகையில் அடைத்ததால், தண்ணீர் தேங்காமல் தற்போது சித்தேரி வழியாக வெளியேறிச் செல்கிறது.

கடந்தாண்டில் பெய்த மழையில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், நகராட்சி ஊழியர்கள் நடப்பாண்டில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதால், நகராட்சி முழுவதும் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நகராட்சியில் ஏரிகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்யும் விதத்தில் தயார் நிலையில் மணல் மூட்டைகள் வைக்கப்பட்டு, நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் ரவீந்தரன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக நகராட்சியின் நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

வெள்ள நிவாரணப் பணியில், நகராட்சியின் சுகாதாரப் பணியாளர்களும், வருவாய்த் துறை பணியாளர்களும் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள நிவாரணப் பணிகளை நகராட்சித் துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி த. சமயச்சந்திரன், தலைமை அலுவலர் என். குமரன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.

Last Updated on Monday, 16 November 2009 06:37