தினமணி 17.11.2009
சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்றதாக 4 உணவகங்களுக்கு நோட்டீஸ்
மதுரை, நவ. 16: சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக, மதுரையில் உள்ள 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி சுகாதாரக்குழு உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் ராலியாபானு, உதவி ஆணையர் (தெற்கு) அ. தேவதாஸ் ஆகியோரது தலைமையிலான குழுவினர், நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, முந்திரித் தோப்பு அருகே வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரக் குழு அறிவுறுத்தியது.
இக்குழு அழகர்கோவில் சாலை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள 4 உணவகங்களுக்குச் சென்று சமையல் செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது அந்த உணவகங்களில் சமையல் கூடங்கள், சுகாதாரமின்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 உணவகங்களுக்கும் நோட்டீஸ் வழங்கி, மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆய்வின்போது, உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதாமணி, சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் உணவு ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.