தினமணி 25.11.2009
களக்காட்டில் 50 பன்றிகள் பிடிபட்டன
களக்காடு, நவ. 24: தினமணி செய்தி எதிரொலியால் களக்காடு பேரூராட்சிப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
களக்காடு பேரூராட்சிப் பகுதியில் அண்மைக்காலமாக பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. இதனால், பஸ் நிறுத்தம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள்
மோகன், அப்துல்மஜீத் உள்ளிட்டோர் பன்றி, நாய்களை பிடித்துக் காட்டுப் பகுதியில் விட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து பேரூராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு பன்றிகளை பிடித்துச் செல்ல டெண்டரும் விடப்பட்டது. இந்நிலையில், களக்காடு பகுதியில் நாய், பன்றிகள் தொல்லையால் மக்கள் அவதிப்படுவதாக நவம்பர் 21-ம் தேதி தினமணியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பன்றிகளைப் பிடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாகனத்தில் களக்காடு பகுதி முழுவதும் வலம் வந்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டன. இவைகள் நாகர்கோவில் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் கொண்டு விடப்படும் என்று கூறப்படுகிறது.
பன்றிகளை பிடித்துச் சென்றது போல தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களையும் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4-வது வார்டு உறுப்பினர் ஜெ. அப்துல்மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.