தினமணி 03.12.2009
திடீர் நகரில் மக்கள் சீரமைத்த பொதுக் கழிப்பறை திறப்பு
மதுரை, டிச. 2: ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்பு நிதியின் மூலம் மதுரை திடீர் நகரில் சீரமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பறையை மேயர் கோ. தேன்மொழி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்.
ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திடீர் நகரின் சுகாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு, இப்பகுதி மக்களின் கோரிக்கை மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்டகாலமாய் பயனற்றுக் கிடந்த பொதுக் கழிப்பறையை, திடீர் நகர் பகுதி பொதுமக்களோடு இணைந்து தென்மதுரை வட்டாரக் களஞ்சியம் புனரமைத்துள்ளது.
சமூகப் பங்கேற்புத் திட்டத்தின் மூலம், தென்மதுரை வட்டாரக் களஞ்சியத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 10 லட்சத்தில் கழிவுகளில் மண் புழு உரம் தயாரிப்புக் கூடம், குப்பை வண்டிகள் ஆகியவற்றோடு தற்போது பொதுக் கழிப்பறையும் சிறப்பான முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையைப் பேணுதல், தொடர் நிர்வாகம் ஆகியவற்றை திடீர் நகர் பகுதியை சார்ந்த களஞ்சிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் மேற்கொள்ளப்படும்.
திறப்பு விழாவில், துணை மேயர் மன்னன், மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் சக்திவேல், தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மா.ப. வாசிமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.