தினமணி 10.12.2009
பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி, டிச. 9: பாதாள சாக்கடைத் திட்டத்தில் மக்களை இணைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தொடக்கிவைத்தார்.
இம் மாநகராட்சியில் ரூ. 52 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் மூலம் 20,403 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16,485 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 3,918 இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டியுள்ளன.
இந்த இணைப்புகளை பொதுமக்களுக்கு கொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தலைமை வகித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்துப் பேசும்போது, வார்டுதோறும் நிகழ்ச்சி நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாநகரப் பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணன் நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர சுகாதார அலுவலர் கலுசிவலிங்கம், உதவி ஆணையர்கள் தெ. சாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள், ஒவ்வொரு தெருவாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.