தினமணி 19.12.2009
கும்மிடிப்பூண்டி கடைகளில் பொருள்கள் தரம் ஆய்வு
கும்மிடிப்பூண்டி, டிச.18: கும்மிடிப்பூண்டியில் மளிகைக் கடைகளில் பொருள்களின் தரம், கலப்படம் குறித்து வட்டார சுகாதார ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சம்பத்தின் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சர்தார்கான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தம், தயாநிதி, சுகுமார், தங்கவேலு, ஹரிநாராயணன், முரளிகிருஷ்ணன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் காட்டுக் கொல்லை தெரு போன்றவற்றில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த சோதனையில் தரக்கட்டுப்பாடு குறியீடு இல்லாமலும், சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படாமலும் இருந்த பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.