தினமணி 19.12.2009
தரமற்ற உணவுப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது
அரவக்குறிச்சி, டிச. 18: கரூர் மாவட்டத்துக்குள்பட்ட அரவக்குறிச்சி, பள்ளபட்டி பேரூராட்சிப் பகுதிகளில், மாவட்ட சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள மளிகைக் கடைகள், அரைவை ஆலைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா பொடி வகைகள் உள்ளிட்டவைகளில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதாசிவம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், மளிகைக் கடைகளில், வட்டார மருத்துவ அலுவலர் சாந்திகண்ணன், மருத்துவ அலுவலர் கௌதமன், சூரிய பிரபா ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், உணவு ஆய்வாளர் வீரப்பன், ஆய்வாளர்கள் டைட்டஸ், கருப்புசாமி, சிவலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை இந்த ஆய்வை மேற்க்கொண்டனர்.
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மசாலா பொடிகளின் தரம், தயாரிப்பு விவரம், காலாவதி தேதி போன்றவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர்.
சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த மசாலா பொடிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
மேலும், காலாவதியான மசாலா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டனர்.