தினமணி 22.12.2009
மளிகை கடைகளில் சுகாதாரத் துறை ஆய்வு
நாமக்கல், டிச.21: எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள மளிகை கடை மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் எருமப்பட்டி நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூள், மல்லித் தூள் இதர உணவு வகை பொருட்கள் தரமானவையா, உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளதா, கலப்படம் உளளதா என்பதை ஆய்வு செய்தனர். இதில், 10 கிலோ கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.