தினமணி 24.12.2009
ரூ.50 ஆயிரம் மதிப்பு காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்
நாமக்கல், டிச. 23: நாமக்கல்லில் புதன்கிழமை நடந்த சோதனையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல் செய்யபட்டன.
÷நாமக்கல்லில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் பல மாதங்களாக வைத்திருந்து விற்பனை செய்வதாகவும், இதனால் நுகர்வோருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதன்பேரில், திடீர் சோதனை நடத்துமாறு மாவட்ட வழங்கல் அலுவலர் து. ரவீந்திரனுக்கு ஆட்சியர் சகாயம் உத்தரவிட்டார். ரவீந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள சூப்பர் மார்ர்கெட் ஸ்டோரில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு உற்பத்தி தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமலும், காவாவதி தேதி முடிந்த பிறகும் பல்வேறு உணவு பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம். ÷இதேபோல், பரமத்தி சாலையில் நடந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிடப்பட்டது.
அதில், உற்பத்தி தேதியில்லாமல் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிஸ்கட், ரொட்டி, கேக் மற்றும் பல்வேறு வகையான உணவு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள அந்த உணவு பொருட்கள் மற்றும் வேனையும் வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
÷இதுபோன்று தொடர்ந்து சோதனைகள் நடைபெறும் எனவும் காலாவதி உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது