தினமணி 24.12.2009
பொது சுகாதாரம்: ஆலோசனைக் கூட்டம்
பழனி டிச. 23: பழனி நகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் குறித்து விடுதி, கடை உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனியில் தற்போது திருவிழா சீசன் துவங்கிவிட்டபடியால் அடிவாரம் பகுதியில் ஏராளமான சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் நகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது சுகாதாரம் குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சித்திக் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் உணவுக் கழிவுகளை அவர்கள் தங்கள் வளாகத்திலேயே பெரிய தொட்டிகள் மூலம் வைத்து தினமும் வரும் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் அல்லது தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளின் உள்ளே போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
குப்பைத் தொட்டிக்கு வெளியே போட்டால் ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை ஸ்பாட் பைன் வசூலிக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேநீர் கடைகளல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் டம்ளர்களை தவிர்த்து அட்டை கப்புகள் பயன்படுத்த வேண்டுமென்றும் மீறி பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுகாதாரப் பணிகளில் தினமும் 16 மணி நேரம் கூடுதல் சுகாதாரப் பணியாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ருத்ரபதி, சுகாதார ஆய்வர்கள் மணிகண்டன், சையது அபுதாகீர், நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.