தினமணி 31.12.2009
பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்
விழுப்புரம், டிச. 29: விழுப்புரத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
÷விழுப்புரம் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தலைமை தாங்கினார். பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கணேஷ்சக்திவேல் வலியுறுத்தினார். சாலைகள் தோண்டப்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளதாக பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அப்போது நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.
÷மற்றொரு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பாபு கொசு மருந்து அடிக்கும் பணியை சரி வர செய்ய வேண்டும் என்றார். சிலர் சாலையில் விளக்குகள் சரி வர எரிவதில்லை என்றும் குற்றம் சாட்டினர். அப்போது நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் குறுக்கிட்டு எரியும் அனைத்து விளக்குகளையும் விட்டுவிட்டு எரியாத இரு விளக்குகளை பற்றி பேசுகிறீர்களே என்றார். அவைகளும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.