தினமணி 04.01.2010
கிரிவலப் பாதையில் கழிவுநீர் வடிகால் சீரமைப்பு பணி
திருவண்ணாமலை, ஜன.3: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை கு.பிச்சாண்டி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அருகே உள்ள அய்யாக்கண்ணு முதலியார் தெரு, சமுத்திரம் காலனி, திருமஞ்சன கோபுரத் தெரு, குமரக்கோயில் தெரு,
மார்க்கெட் பகுதியில் உள்ள பெரியகடைத் தெரு, மண்டித் தெருக்களில் நகராட்சி சார்பில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
திருமஞ்சன கோபுரத் தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கவும் பிச்சாண்டி உத்தரவிட்டார்.
அப்போது வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கேஓஎஸ்.ஆறுமுகம், செந்தில்மாறன் ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவில் மண்டித் தெருவில் உள்ள கால்வாய்களை அகலப்படுத்தி, சிறிய பாலங்கள் கட்ட வேண்டும் எனக் கோரினர்.
எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம், நகராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ கு. பிச்சாண்டியும், நகராட்சித் தலைவர் இரா. ஸ்ரீதரனும் உறுதி கூறினர்.
மண்டித் தெருவில் நடைபெறும் புதைசாக்கடைப் பணிகளையும் விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் உள்பட பலர் உடன் சென்றனர்.