தினமணி 06.01.2010
கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை: அமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 5: கொசு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.சிறப்பு காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வாரியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்துச் செய்தி ஆய்வில் 2007, 2008-ம் ஆண்டைவிட 2009-ம் ஆண்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆய்வுக் கூட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் பருவமழை மற்றும் குளிர் காலங்களில் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பது வழக்கமான ஒன்றாகும்.நோய்கள் வாரியாக ஆய்வு செய்யும்போது மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா நோய்களும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.காய்ச்சல் என்பது ஒரு நோய்த் தொற்றின் அறிகுறியே. காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிய அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச பரிசோதனை செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து தேவைப்படும் நிலையில், புதுச்சேரி, மதுரை, ஒசூர் ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.