தினமணி 06.01.2010
புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்கு பூமி பூஜை
பெரம்பலூர், ஜன. 5: பெரம்பலூர், துறைமங்கலம் பகுதிகளில் அமையவுள்ள புதைச் சாக்கடைத் திட்டப் பணிக்கான நீரேற்று நிலைய பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டு பகுதிகளிலும் ரூ.23.8 கோடி மதிப்பிலான புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர், துறைமங்கலம் பகுதிகளில், இந்தத் திட்டத்துக்கான பிரதான நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக, பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 4 மற்றும் 9-ம் வார்டுகளில் முழுநேர நியாய விலைக் கடை களை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, நகராட்சி ஆணையர் பி. அசோக்குமார், துணைத் தலைவர் கி. முகுந்தன், உறுப்பினர்கள் கண்ணகி, அப்துல்பாரூக், ரஹமத்துல்லா, ஜெயக்குமார், கே.ஜி. மாரிக்கண்ணன், சரவணன், பொற்கொடி ஞானசேகரன், நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், பணி மேற்பார்வையாளர் கார்த்தி, திமுக பிரதிநிதிகள் ஜெய்சங்கர், ஏ.கே.வி. மோகன்ராஜ், ஆசிரியர் ஆனந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர் பூ. சீனிவாசன், ஒப்பந்ததாரர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்