Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீக்கடைகளில் ரகசிய கண்காணிப்பு

Print PDF

தினகரன் 07.01.2010

டீக்கடைகளில் ரகசிய கண்காணிப்பு

சென்னை : கலப்பட டீத்தூளில் போடப்பட்ட டீ குடித்த 3 பெண்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து நகர் முழுவதும் டீக்கடைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.புளியந்தோப்பு கார்ப்பரேஷன் பெரிய லேன் பகுதியில் வசிக்கும் விஜயா என்பவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதி டிமிலர்ஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ வாங்கினார்.

வீட்டுக்கு வந்த அவர், தாய் பாக்கியலட்சுமி மற்றும் மருமகள் ரேகா ஆகியோருடன் டீயை குடித்தார். குடித்த சில மணி நேரத்திலேயே 3 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட டீக்கடையில் சோதனை நடத்தினார். டீத்தூள், பாய்லர் மற்றும் அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. டீ மாஸ்டர் வெங்கடேசன், உரிமையாளர் மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.டீக்கடையில் கைப்பற்றப்பட்ட டீத்தூள், எந்த கடையில் இருந்து வாங்கப்பட்டது, எந்தக் கம்பெனியின் தயாரிப்பு என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகரில் உள்ள பல டீ கடைகளில் இதுபோல கலப்பட தூளில் டீ போடுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், குறிப்பிட்ட கடையில் கலப்படம் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் புகார் செய்தால்தான் போலீசார் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் பொதுமக்கள் தகவல் மட்டுமே தெரிவிப்பதால், நகரில் உள்ள டீக்கடைகளை போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

அதில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துவது தெரிந்தால், மாநகராட்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சோதனை நடத்த போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் இரு துறைகளின் அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு சுகாதார துறை அதிகாரிகள் அயப்பாக்கம், அம்பத்தூர், திருவேற்காடு, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி போலி டீத்தூள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Thursday, 07 January 2010 06:13