தினமணி 07.01.2010
செயற்கை நிறம் ஏற்றிய உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் நடவடிக்கை
தருமபுரி, ஜன.6: கவர்ச்சிகரமான செயற்கை நிறம் ஏற்றப்பட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) என்.அய்யனார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954-ஐ தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை சார்பில் அரூர், பாலக்கோடு, காரிமங்கலம் ஒன்றியங்களில் உணவு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவுப் பொருள்களில் செயற்கை நிறம் ஏற்றப்பட்டு விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகைப் பொருள்கள், மசாலாப் பொருள்களில் பேட்ஜ் நெம்பர், தயாரிக்கப்பட்ட தேதி, தயாரிப்பாளர்களின் முழு முகவரி ஆகியவை இல்லாமல் விற்பனை செய்தால் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். ஓட்டல்களில் கொதிக்க வைத்து ஆறிய குடிநீர் அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரையே விநியோகம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.