தினமணி 07.01.2010
தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்ப்புக்கு சிறப்பு முகாம்
சேலம், ஜன.6:சேலம் மாவட்டத்தில் தூய்மைப் பணி புரிவோர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் 4-ம் தேதி முதல் நடைபெறுகிறது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒரு வாரத்துக்கு இந்த முகாம் நடைபெறுகிறது. 18 வயது முதல் 60 வயது உடைய தூய்மைப் பணிபுரிவோர் இதில் கலந்து கொண்டு உறுப்பினர்களாகச் சேரலாம். மத்திய, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனை, பகுதி நேர ஒப்பந்தப் பணிபுரிவோர், தங்கும் விடுதிகள், போலீஸ் நிலையங்கள், வங்கிகளில் பணிபுரிவோர் தகுதி உடையவர்கள்.
புதிய உறுப்பினராகப் பதிவு செய்ய தங்கள் குடும்ப அட்டை, சாதிச் சான்று மற்றும் தூய்மைப் பணி புரிவோர் என்பதற்கான சான்று, உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர், நகராட்சி ஆணையர், கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கையொப்பம் பெற்று அருகிலுள்ள மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலர்களிடம் விண்ணப்பத்தை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.