Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பால் வியாபாரிகளிடம் தரப் பரிசோதனை

Print PDF

தினமணி 07.01.2010

பால் வியாபாரிகளிடம் தரப் பரிசோதனை

திருவாரூர், ஜன. 6: திருவாரூர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் பால் வியாபாரிகளிடம் பாலின் தரம் குறித்து செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கும் இடம், சேமிப்பு மற்றும் விற்பனை செய்யும் இடங்களை அவ்வப்போது ஆய்வு செய்வதும், உணவு மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிறப்புச் சோதனையாக பால் உணவுப் பொருள்கள் குறித்து திருவாரூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட காந்தி சாலை, கீழவீதி, தெற்குவீதி, எல்லையம்மன் சந்நதி தெரு, துர்காலயா சாலை, விளமல், நாகை சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் க. சரவணன் தலைமையில் சுகாதார அலுவலர் எஸ். விஜயகுமார், உணவு ஆய்வாளர் க. மணாழகன், சுகாதார ஆய்வர்கள் வி. பழனிச்சாமி, ஆர். பாலமுருகன் ஆகியோர் அடங்கிய சுகாதாரக் குழு திடீர் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் 55 சில்லரை பால் வியாபாரிகளிடம் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆணையர் க. சரவணன் கூறியது இந்த ஆய்வில் பால் விற்பனை செய்வதற்கான உரிமத் தொகையாக ரூ.3,825 வசூலிக்கப்பட்டது.மேலும் பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த அறிக்கை பெறப்பட்டவுடன் கலப்படமான பால் விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். பாலில் கலக்கப்படும் தண்ணீர் கூட சுத்தமானதாக இல்லை.

இதனால், இதை உள்கொள்பவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும். மாடுகள் அதிகமாக பால் சுரக்க ஊசியை பயன்படுத்துகின்றனர். இந்த பாலை உள்கொள்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

உரிய அளவு கொழுப்புச் சத்து இல்லாமல் பால் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது உணவுக் கலப்படத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Last Updated on Thursday, 07 January 2010 10:50