Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை

Print PDF

தினமணி 07.01.2010

புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை

பெரம்பலூர், ஜன. 6: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்னம் வட்டத்தில் உள்ள லெப்பைகுடிகாடு பகுதியில் அமைய உள்ள புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவது குறித்த அமைதிப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எம்.விஜயகுமார் பேசியது:

லெப்பைகுடிகாடு பேரூராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.99.70 லட்சம் மதிப்பீட்டில் புதைச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், லெப்பைகுடிகாடு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த பென்னகோனம், வடக்களூர், ஒகளூர், ஆடுதுறை, அத்தியூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், ஒகளூர் வாய்க்காலில் கழிவுநீரை விட்டால், விவசாய நிலம், சுற்றுச்சூழல் மற்றும் பாசன ஏரிகள் பாதிக்கும் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் செயல்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜன. 19-ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றார் விஜயகுமார். இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மா. தேவதாஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் சேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சம்பந்தம், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜே. காஜாமொய்தீன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஏ. ரங்கசாமி மற்றும் லெப்பைகுடிகாடு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 January 2010 10:52