தினமலர் 11.01.2010
சென்னையில் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து
சென்னை : மாநகராட்சி சார்பில், சென்னையில் 1,126 இடங்களில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.போலியோ சொட்டு மருந்து போடும் பணியில் மாநகராட்சி சார்பில், 4,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டன. நேற்று காலை, தேனாம்பேட்டை மாநகராட்சி நல்வாழ்வு மையத்தில் மேயர் சுப்ரமணியன், போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.சென்னையில் நான்கு லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது.
இதில், நான்கு லட்சத்து 41 ஆயிரம் குழந்தைகளுக்கு கொடுக்கப் பட்டது. 86 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் மாநகராட்சி நல்வாழ்வு மையத்தில் அளிக்கப்படும்.நேற்று இரவு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளிலும் இரவு 11 மணி வரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.