தினமலர் 13.01.2010
கடையநல்லூரில் மதுரை மருத்துவ குழுவினர் ஆய்வு
கடையநல்லூர்:மர்மக் காய்ச்சல் தொட ர்பாக மதுரை ஐ.சி.எம். ஆர்.மருத்துவ குழுவினர் நேற்று கடையநல்லூர் பகுதிகளில் காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு ரத்த மாதிரி மேற்கொண்டனர். கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு மீண்டும் காய்ச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், சுகாதார துறை செயலாளர் சுப்புராஜ், இயக்குநர் இளங்கோ, கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 7ம் தேதி வருகை தந்தனர். நோயாளிகளிடம் நோய் பாதித்தது குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து கடையநல்லூரில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்திட மதுரையில் இருந்து மருத்துவ குழு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி கிருஷ்ணாபுரம், பேட்டை ஆகிய பகுதிகளில் மதுரை ஐ.சி.எம்.ஆரில் இருந்து பூச்சியியல் வல்லுநர் பரமசிவன் தலைமையில் டெக்னீசியர்கள் கொண்ட குழுவினர் காய்ச்சல் பாதித்த நோயாளிகளின் ரத்தத்தின் மாதிரிகளை எடுத்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட நோயாளிகளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டதுடன், அவற்றினை மதுரை ஆய்வகத்தில் ஆய்வு செய்ய மருத்துவ குழுவினர் எடுத்து சென்றனர். மதுரையில் இருந்து வந்த மருத்துவ குழுவினருடன் கடையநல்லூர் நகராட்சி தலைவர் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப், மருத்துவ அதிகாரி டாக்டர் ஜவஹர் நிஷா, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், மற்றும் சுகாதார துறையினர் உடன் சென்றனர