தினமலர் 13.01.2010
நவீன கழிவறை கட்ட இடம்: அமைச்சர் நேரில் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நவீன முறையில் இலவச கழிவறை அமைப்பதற்கான இடத்தை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நவீன முறையில் இலவச கழிவறை மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முப்பது லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பெரம்பலூரில் ஃபிப்., 4ம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, அரசு பாலிடெக்னிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா, அரசு ஐ.டி.ஐ., திறப்பு விழா, காரை சமத்துவபுரம் திறப்பு விழா, வேலூர் மற்றும் நான்கு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய தொடக்க விழா, கேந்திரிய வித்யாலயா பள்ளி துவக்க விழா, நான்கு பாலங்கள் திறப்பு விழா, மாவட்ட விளையாட்டு அரங்கம், சிறுவர் பூங்கா, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் ஆகிய விழாக்களில் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். அப்போது, புது பஸ் ஸ்டாண்டில் நவீன கழிவறைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் ராசா பங்கேற்கிறார்.
சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் முதல்வர் அல்லது துணை முதல்வர் பங்கேற்று துவக்கி வைக்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, கலெக்டர் விஜயகுமார், எஸ்.பி., வனிதா, டி.ஆர்.ஓ.,பழனிசாமி, நகராட்சி தலைவர் ராஜா, யூனியன்குழு தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர