தினமலர் 16.01.2010
92 கிலோ ஆடு, கோழி இறைச்சி சுடுகாட்டில் குழிதோண்டி புதைப்பு!
கோவை: வள்ளுவர் தினத்தன்று, விதிமுறை மீறி விற்பனை செய்யப்பட்ட 92 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய ஐந்து நாட்களில் உயிர் வதை செய்வதற்கு, அரசாணை எண்.122 ன் படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் இறைச்சி விற்பனை செய்த கடைகளில், மாநகராட்சி மிருககாட்சி சாலை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையிலான சுகாதாரப் பிரிவினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணபதி, மணியகாரம்பாளையம், செல்வபுரம் ஆகிய பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனைக்காக கடைகளில் வைக்கப்பட்டிருந்த 92 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, சொக்கம்புதூர் சுடுகாட்டில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.