தினமலர் 18.01.2010
பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடக்கம்: பழனிமாணிக்கம் தகவல்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கூறினார். பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி லயன்ஸ், ரோட்டரி கிளப், ஜூனியர் சேம்பர் சார்பில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியை ராஜாமடத்தில் அமைத்துத் தந்த மத்திய மந்திரி பழனிமாணிக்கத்துக்கு பாராட்டு விழா நடந்தது. எம்எல்ஏ ரெங்கராஜன் தலைமை வகித்தார். விழாக் குழுத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் ராஜகோபால், நகர வர்த்தக சங்க தலைவர் ராமானுஜம், கிளப் மாவட்ட தலைவர் அருணாசலம், ரோட்டரி மாவட்ட தலைவர் இமானுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: எனக்கு இங்கே அளிக்கப்படும் எல்லாப் பாராட்டும் முதல்வருக்குத்தான் சேரும். பொது மக்களுக்காக கேட்கிற எதையும் முதல்வர் தட்டியதில்லை . நல்லது எதுவோ அதை எல்லாம் நிறைவேற்றித் தருவார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் கரை புரண்டு வந்தது. கல்லணையில் 2 லட்சம் கன அடி வெள்ளத்தை கொள்ளிடத்தில் திருப்பி விட்டோம். ஆனால் அதே நேரத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி கடைமடை பகுதி பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துகிறார்கள் என்று செய்தி வந்ததை பார்த்து விட்டு முதல்வர் கேட்டார். கல்லணைக் கால்வாய் புது ஆற்றுப் பகுதி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும். ஆனால் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டாலே உடைப்பு ஏற்பட்டுவிடுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் எல்லா ஆறுகளுமே இயற்கையானது. ஆனால் கல்லணைக் கால்வாய் புது ஆறு செயற்கை ஆனது. இந்த ஆறு உருவானதற்குப் பிறகு 75 ஆண்டுகளாக எந்த விதமான மராமத்து பணிகளும் செய்யப்படவில்லை. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் போய்ச் சேரவில்லை என்பதை சொன்னேன். முதல்வர் ரூ.200 கோடி செலவில் கல்லணைக் கால்வாயை சீரமைக்க உத்தரவிட்டார். தற்போது கல்லணைக் கால்வாயில் விட்டுப்போன வாய்க்கால்களை சீரமைக்க மேலும் ரூபாய் 200 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் உள்ள பள்ளிக்களில் மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.இப்பகுதி மாணவிகள் நீண்ட தூரம் சென்று படிக்க இயலாது என்ற காரணத்தால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் பகுதிகளை உள்ளடக்கிய 40 கிலோ மீட்டருக்குள் ராஜாமடத்தில் அரசு பொறியியல் கல்லூரி அதுவும் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டத்தைக் கொணடு வரும் போது அதற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை நகருக்கு புறவழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் தஞ்சைக்கும் மற்ற நகரங்களுக்கும் எளிதில் சென்றடைய லாம். நகரமும் நல்ல வளர்ச்சியடையும். எதிர்காலத்தில் அரசு மட்டுமே மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து விட முடியாது.
பொதுமக்களும் சமூக சேவை சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும். அதிராம்பட்டிணத்திற்கு புதிய பஸ் நிலையம் கட்டவும், காரைக்குடி, மயி லாடுதுறை அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்ப டும்.பட்டுக்கோட்டை நகரம் தஞ்சை , கும்பகோணம் நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி டையும். விரைவில் பட்டுக் கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணி தொடங்கப்படும்.இவ்வாறு பழனிமாணிக்கம் பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, திருஞான சம்பந்தம், பாலசுப்பிரமணியம், பேரூராட்சித் தலைவர்கள் அப்துல்வகாப், பஷீர் அகமது, அசோக்குமார், பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் பிரியா, பேராசிரியர் ராஜமாணிக்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியகுழு தலைவர் ராஜரத்தினம் மற்றும் பலர் பேசினர். முடிவில் ரகு நன்றி கூறினார்.