தினகரன் 18.01.2010
மெரினாவில் 60 டன் குப்பை அகற்றம்
சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சிலும் நேற்றுதினம் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். மெரினாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தூய்மையை பராமரிக்கவும், குப்பைகளை போட ஏராளமான இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. எனினும், வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பைகளை கடற்கரையிலும், காமராஜர் சாலையை ஒட்டியுள்ள அழகிய புல்வெளிகளிலும் பொதுமக்கள் வீசிவிட்டு சென்றனர்.
இதையடுத்து, மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நீல்மெட்டல் நிறுவனம் 175 ஊழியர்கள் மூலம் காணும் பொங்கல் இரவே குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டது. இந்த பணி நேற்று அதிகாலை வரை நடந்தது. மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் 60 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குப்பைகளை 3 ரகமாக பிரித்து 25 வாகனங்களில் குப்பை சேகரிக்கும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.