Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார சீர்கேடு: மூன்று ஓட்டல்களுக்கு சீல்

Print PDF

தினமணி 20.01.2010

சுகாதார சீர்கேடு: மூன்று ஓட்டல்களுக்கு சீல்

சென்னை, ஜன. 19: சென்னையில் பொது நலத்துக்கு பாதகமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய மூன்று ஓட்டல்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்துக்கு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கழிவுநீர்க் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மூன்று ஓட்டல்கள், கழிவுகளை வடிகட்டாமல் நேரடியாக கழிவுநீர்க் கால்வாயில் இறக்கி விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அடைப்பு ஏற்பட்டு, மனித நுழைவு திறப்பு வழியாக கழிவுநீர் அடிக்கடி வெளியேறி வந்தது. பொது நலத்துக்கு பாதகமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக மூன்று ஓட்டல்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:

ஏற்கெனவே எழும்பூர் ரயில்நிலையம் எதிரில் இதுபோல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய இரண்டு ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அவர்கள் முறையாக கழிவுநீர் வடிகால்வாய் அமைத்தவுடன், ஓட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதுபோல் இப்போது சீல் வைக்கப்பட்டுள்ள மூன்று ஓட்டல்களும் கழிவுநீர் வடிகால்வாய்களை முறையாக அமைத்து, சுகாதார அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே ஓட்டல்களை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.

Last Updated on Wednesday, 20 January 2010 06:22