தினமலர் 26.01.2010
மாநகராட்சி நகர்நல மைய டாக்டர்களுக்கு தனி பயிற்சி
கோவை : மாநகராட்சி சார்பில் இயங்கும் ஐந்து நகர் நல மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற, மாநகராட்சி டாக்டர்களுக்கான தனிப்பயிற்சி நேற்று துவங்கியது. கோவை மாநகராட்சியின் சீத்தாலட்சுமி, மீனாட்சி, வி.வி.எம்., சிங்காநல்லூர், சி.டி.எம்., ஆர்.கே.பாய் நகர் நல மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ.9001-2008 தரச்சான்று பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுதரும் பிரதிநிதி சிவக்குமார் நேற்று மாநகராட்சி நகர் நல மையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு முதற் கட்ட பயிற்சி அளித்தார்.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் நடைமுறை அமைதியாக இருத்தல், சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வந்து செல்லும் நோயாளிகளை பதிவுசெய்தல், சிகிச்சை பெற்றவர்களுக்கு சிகிச்சை பெற்ற விபரங்களை குறிப்பிட்டு விபர அட்டை வழங்குதல், மாத்திரை வழங்க சீட்டு கொடுத்தல்,பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ஏழை மற்றும் பாமர மக்கள் வந்து செல்வர்.
அவர்கள் மனம் நோகாமலும், நம்முடைய தரம் குறையாமலும் சிகிச்சையளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து, ஊசிகள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் காத்திருக்கும் நோயாளிகள் கால் கடுக்காமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.நோயாளிகளுக்கு எந்த குறைபாடுகளும் இருக்க கூடாது. இவ்வாறு பயிற்சியாளர் சிவக்குமார் கூறினார். பயிற்சியில் மாநகராட்சி டாக்டர்கள் பங்கேற்றனர். பயிற்சியை கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம் பார்வையிட்டனர்.