தினமலர் 27.01.2010
காமயகவுண்டன்பட்டியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி
கம்பம்:காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குப்பைகள் அகற்றம், கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஒட்டுமொத்த துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காய்ச்சலால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொசு உற்பத்தியை முழுவதும் கட்டுப்படுத்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் காலை முதல் மாலை வரை கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.பேரூராட்சி தலைவர் ராதிகா, செயல் அலுவலர் குணாளன் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளர் பள்ளி தெரு, வாய்க்கால் தெரு, நடுத்தெரு, மெயின்ரோடு, கருமாரிபுரம் உள்ளிட்ட பல தெருக்களிலும், சாக்கடை மற்றும் குப்பை கிடங்குகளிலும் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. ஒரே சமயத்தில் 20 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.