தினமணி 28.01.2010
ராசிபுரம் பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்
ராசிபுரம், ஜன.27: நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் ராசிபுரம் ஒன்றியத்தை கொசுக்கள் இல்லா வட்டாரமாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக 40 சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு வீடுவீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கிராம நல துப்புரவுக் குழுவில் உள்ள 26 பெண் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர்த் தொட்டி, பானை, மேல்நிலைத் தொட்டி, கிணறு ஆகியவற்றில் அபேட் என்ற கொசு மருந்து ஊற்றுவார்கள். மேலும் தற்காலிகமாக உள்ள டயர், உடைந்த பானை, தேங்காய் ஓடு, ஆகியவற்றை அகற்றிவிட்டு நீர் தேங்காவண்ணம் செய்வார்கள். இப்பணி முதல்கட்டமாக சிங்களாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கப்பட்டது.
ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி மற்றும் ஒன்றிய குழுத் தலைவர் விஜயலதா பாலச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி இப்பணியை துவக்கி வைத்தனர். ஊராட்சி தலைவர் ராஜு முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்யாணசுந்தரம், மாவட்ட தாய் சேய் அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.மகுடீஸ்வரன் நன்றி கூறினார்.