தினமலர் 29.01.2010
ரோட்டில் திரிந்த பன்றி, கழுதைகள் : போடி நகராட்சி நடவடிக்கை
போடி : போடியில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு மற்றும் இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த பன்றி, கழுதைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து, விலங்குகள் நல மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர்.
போடி பஸ்ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி, காமராஜ் பஜார், தினசரி, வாரச் சந்தை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் பன்றிகள், கழுதைகள் தாரளாமலா உலா வந்து கொண்டிருந்தன. போடி மெயின்ரோடு உள்ளிட்ட தெருக்களில் கழுதைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுகின்றன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் தாராளமாக உலா வருவதால் பல்வேறு வகையில் சுகாதார கேடு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு காய்ச்சலும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் நகராட்சி பகுதியில் சுற்றி திரிந்த பன்றி, கழுதைகளை பிடித்து பாரதிய பிராணி நல வாரியம் கட்டுப் பாட்டுக்குள் தேனியில் இயங்கும் விலங்குகள் நல மற்றும் கிராம மேம்பாட்டு அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்: நகரில் பொதுமக்களுக்கு சுகாதார கேடும், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுத்தி வந்த 60 க்கும் மேற்பட்ட பன்றி, கழுதைகளை பிடித்து விலங்குகள் நல மற்றும் கிராம மேம் பாட்டு அறக் கட்டளை வசம் ஒப்படைத் துள்ளோம் என்றார்.