தினமணி 29.01.2010
போடியில் கழுதை, பன்றிகள் அகற்றம்
போடி, ஜன. 28: போடி நகராட்சியில் சுற்றித் திரிந்த கழுதைகள், பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.
போடி பகுதியில் மர்ம காய்ச்சலினால் மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து போடி நகராட்சியில் சுற்றித் திரிந்த பன்றிகள், கழுதைகளைப் பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தேனியில் செயல்படும் அவார்டு டிரஸ்ட் மூலம் பன்றிகள், கழுதைகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு பன்றி, கழுதைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் வாய்ப்பு இருந்ததால், போலீஸ் பாதுகாப்புடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் போடி நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 30 பன்றிகள், 60 கழுதைகள் வலைகள் மூலம் பிடிக்கப்பட்டு இதற்காக டிரஸ்ட் சார்பில் இயங்கும் பண்ணைகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட உள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே.சரவணக்குமார் கூறியது: கொடுமையிலிருந்து விலங்குகளைப் பாதுகாத்தல் சட்டம் 1960-ன்படி குற்றம் என்பதால் பன்றி, கழுதைகள் ஆகியவற்றை இடையுறு இன்றி வலை மூலம் பிடித்து சிறப்புப் பண்ணைகளில் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி மூலம் அதன் உரிமையாளர்கள் கோரினால் பராமரிப்புச் செலவுகளை செலுத்திய பின் தொண்டு நிறுவனத்தினர் வழங்குவர். தொடர்ந்து நகராட்சிப் பகுதிகளில் சுற்றும் பன்றி, கழுதைகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.