தினமலர் 02.02.2010
ஆட்டிறைச்சி கடைகள் நெல்லையில் அடைப்பு
திருநெல்வேலி: திடீர் கட்டண உயர்வால் நெல்லையில் ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்தில் ஆடு அறுக்கும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஆட்டிறைச்சி கடைக்காரர்கள் ஒரு ஆடு அறுக்க மாநகராட்சிக்கு ஐந்து ரூபாயை கட்டணமாக செலுத்திவந்தனர். தற்போது ஆட்டிறைச்சி மையத்தில்தான் ஆடுகளை அறுக்க வேண்டும் எனவும் இதற்காக ஒரு ஆட்டிற்கு 20 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் அதனை தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்திருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்தது. இதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொருமுறையும் ஆடுகளை அறுப்பதற்காக குறிப்பிட்ட மையத்திற்கு செல்ல முடியாது எனவும் கட்டணமும் அதிகம் என கூறி நேற்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பான்மையான ஆட்டிறைச்சி கடைகள் மூடிக்கிடந்தன.