தினமணி 04.02.2010
தேங்காய் எண்ணெயில் கலப்படம்: ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர், பிப்.3: தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து காங்கயம், தாராபுரம் பகுதிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளில் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் காங்கயம், தாராபுரம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, பொதுசுகாதாரத் துறையின் உணவு கலப்பட தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை இந்த ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சுமார் 100 ஆலைகளில் நடந்த இந்த ஆய்வில் சுமார் 20 ஆலைகளில் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த ஆலைகளில் உள்ள எண்ணெய்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.
ஆய்வகப்பரிசோதனையில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஊர்ஜிதமானால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் உணவுகலப்பட தடுப்புப் பிரிவு இணை இயக்குநர் கண்ணன். இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் விஜயலட்சுமி (திருப்பூர்) சேகர் (நாமக்கல்), அமுதா (ஊட்டி), சதாசிவம் (கரூர்), செந்தில்குமார் (தாராபுரம்) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.