தினகரன் 05.02.2010
மக்கள் முன்னிலையில் ஆடு அறுக்கக்கூடாது விதிமீறும் இறைச்சி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை
தேனி : தேனி நகரில் மக்கள் முன்னிலையில் ஆடு அறுக்கக்கூடாது, நகராட்சிக்கு சொந்தமான தொட்டியில்தான் அறுக்க வேண்டும்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் மோனி எச்சரித்துள்ளார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் சுமார் 75க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைக்காரர்கள் ஆடுகளை அறுக்க வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான ஆடு அடிக்கும் தொட்டி உள்ளது. இங்குதான் ஆடுகளை அறுத்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் ஆடுகளை உயிரோடு அறுப்பதை தடுக்கவே இந்த முறையை தமிழகம் முழுவதும் அரசு கடைப்பிடித்து வருகிறது.
தேனி மற்றும் அல்லிநகரம் பகுதியை பொறுத்தவரையில், பெரும்பாலான இறைச்சி கடைகளில் அதிகாலை வேளைகளில் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் ஆடுகளை அறுப்பது வாடிக்கையாகியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் அல்லது இறைச்சி கடைகளில் ஆடுகளை உயிருடன் வெட்டக்கூடாது, ஆடு அடிக்கும் தொட்டியில்தான் அறுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தேனி நகராட்சிக்கு அறிவுறுத்தி கலெக்டர் முத்துவீரன் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில், நகராட்சியும் பலமுறை அறிவுறுத்தியும், இறைச்சி கடைக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் முதல் கட்டமாக, நகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சி வெட்டும் கட்டைகள், ஆக்கிரமிப்பு கூரைகளை அகற்றினர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் மோனி கூறுகையில், ‘பலமுறை அறிவுறுத்தியும் ஆடுகளை உயிருடன் அறுக்கும் இறைச்சி கடைகளில் உள்ள கட்டைகளை அகற்றம் செய்து வருகிறோம். விதி மீறுபவர்கள் மீது நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்Õ என்றார்.