தினமலர் 08.02.2010
1.07 லட்சம் குட்டீசுக்கு சொட்டு! கோவை மாநகராட்சி சுறுசுறுப்பு
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி, கோவை மாநகராட்சியில் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்தது. நகரில் சீத்தாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் நடந்த முகாமை, மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், துணைக்கமிஷனர் சாந்தா, சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து, மேற்கு மண்டல தலைவர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி நகர் நலத்துறை சார்பில், கோவை நகரில் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு பல்வேறு மையங்களில் நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை 7.00 மணி முதல் சொட்டு மருந்து வழங்கும் பணி துவக்கியது. மாநகராட்சி சார்பில் செயல்படும் 34 நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவு கூடங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளிட்ட இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தவிர, நான்கு நடமாடும் மையங்கள் என, மொத்தம் 196 மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இப்பணியில் 784 ஊழியர்கள் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நள்ளிரவு 12.00 மணி வரை சொட்டு மருந்து வழங்க, மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) பெருமாள்சாமி அறிவுறுத்தியிருந்தார்.