தினமலர் 08.02.2010
இரண்டாம் கட்டமாக 1867 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
மதுரை : இளம்பிள்ளை வாதத்தை தடுக்க, மதுரை நகரில் 267 மையங்கள், புறநகரில் 1600 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட மூன்று லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாவது கட்டமாக நேற்று இலவச போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
தினமலர் அலுவலகத்தில், நர்சுகள் கலாராணி, பிருந்தா ஆகியோர் சொட்டு மருந்து வழங்கினர். மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் நாகலட்சுமி, ஜோதிலட்சுமி உதவியாக இருந்தனர். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், துறைத் தலைவர் டாக்டர் அமுதா ராஜேஸ்வரி தலைமையில் டீன் சிவக்குமார் வழங்கினார். விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கப்படுகிறது.
சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பழனிச்சாமி தலைமையில், சுகாதாரம் மற்றும் சத்துணவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 6675 பேர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இந்தாண்டும் வெளிமாநிலத்தவர், இலங்கை அகதிகள் மற்றும் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 541 வெளிமாநிலத்தவர் குழந்தைகள், 698 இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி சார்பில் சுந்தரராஜபுரம் மகப்பேறு மருத்துவமனையில், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன் துவக்கி வைத்தனர். விடுபட்டவர்களுக்கு ஒரு வாரம் வீடு வீடாக சென்று வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில், நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், சுகாதாரக்குழு தலைவர் ராலியாபானு, நகரமைப்பு குழுத் தலைவர் மல்லிகா பங்கேற்றனர்.