தினமணி 08.02.2010
பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
நாகப்பட்டினம், பிப். 7: நாகை மாவட்டத்தில் வணிகர்களிடையே பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கங்கள் நடத்தப்படவுள்ளன என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன்.நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
நாகை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டமாக, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.கடந்த வாரம் வேளாங்கண்ணியில் ஓர் ஆய்வு மேற்கொண்ட போது 5 கிலோ குப்பையில் சுமார் 70 சதம் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும், சில இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மணலுக்குக் கீழே புதைக்கப்படுவதும் தெரிய வந்தது.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம். அந்த வகையில், விரைவில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என்றார் ஆட்சியர் முனியநாதன். இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருள்கள் விழிணர்வுப் பேரணியை ஆட்சியர் தொடக்கிவைத்தார்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேனிலைப் பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர். பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயம் முன்பு நிறைவடைந்தது.