தினகரன் 08.02.2010
தமிழகத்தில் 2வது தவணையாக 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை: தமிழகத்தில் இளம்பிள்ளைவாத (போலியோ) நோயை தடுக்க, 40 ஆயிரம் சிறப்பு மையங்கள் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு 2வது தவணையாக நேற்று சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
இளம்பிள்ளைவாத (போலியோ) நோயை முற்றிலும் ஒழிக்க நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் தவணையாக கடந்த மாதம் 10ம் தேதி 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
2வது தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. எல்லா முகாம்களிலும் தாய்மார்கள் வரிசையில் நின்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கச் செய்தனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், மாநகராட்சி, நகராட்சி மருத்துவமனைகள், சத்துணவு மையம், பள்ளி, பஸ், ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா மையம் என மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான பணியில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் அடையாளமாக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.