தினகரன் 08.02.2010
போலியோ சொட்டு மருந்து முகாம்
குன்னூர்:குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் நேற்று இந்தாண்டுக்கான 2ம் கட்ட இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலையம், ரயில் நிலையம், சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ராமசாமி தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். ஆணையர் ராஜன், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஜெகநாதன், முருக குமார், அனீபா, சாந்தா சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் செஞ்சிலுவை சங்கம், லயன்ஸ் கிளப், அரிமா சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து பணியாற்றினர்.
கோத்தகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் போஜன் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். குன்னூர் தாலுகா பகுதிகளில் நேற்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.