தினமணி 09.02.2010
துப்புரவுப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு பயிற்சி
புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரி பகுதிகளில் கொசுவை ஒழிக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
÷இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சி.ராஜமாணிக்கம் கூறியது: புதுச்சேரியில் கொசுக்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் 5-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
÷பொது சுகாதாரத்துறை அமைச்சர் எ.நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் 1 வாரத்தில் கொசு ஒழிப்புக்கான பணிகளை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
÷உழவர்கரை நகராட்சியில் 37 வார்டுகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள போதுமான ஆட்கள் சுகாதாரத்துறையில் இல்லை.
÷அதனால் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பதற்கான பயிற்சி திங்கள்கிழமை வழங்கப்பட்டது. ஒரு வார்டுக்கு 2 நபர் வீதம் 74 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
÷பயிற்சியில் மருந்து கலத்தல்,தெளித்தல், உபகரணத்தில் ஏற்படும் சிறு பழுதுகளை சரி செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் மருந்து தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது.
÷பயிற்சியில் நகர்மன்றத் தலைவர் ஜெயபால் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மேற்பார்வையில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு துப்புரவுப் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்க உள்ளனர்.
÷கொசு அதிகம் உள்ள பகுதிகளில் பாகிங் மெஷின் மூலம் புகை அடிக்கப்படும். இது ஒரு தாற்காலிக தீர்வுதான். வீட்டு கழிவறை தொட்டியிலிருந்து 60 சதவீத கொசுக்கள் உருவாகிறது. நீர் தேங்கி நிற்கும் வாய்க்கால்களில் 30 சதவீதமும், குடிநீர் போன்றவற்றில் 10 சதவீதமும் உருவாகிறது. இங்கு கழிவறைத் தொட்டியில் இருந்து நீர் வெளியேறும் குழாய்கள் யூ வடிவில் பொருத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
÷இதனால் குழாய்களில் நீர் நிறைந்து, குழாய்கள் வழியாக கொசு உற்பத்தியாகி வெளியேற வாய்ப்பில்லாமல் போகும். இவ்வாறு பொருத்தும் செலவு ரூ.100தான் ஆகும். ÷இத் தொட்டிகளில் காற்றுப் போக்கிகளில் கொசு வலைகளை கட்டுவதன் மூலமும் கொசுக்கள் உற்பத்தியாகி வெளியேறுவது தடுக்கப்படும். இதை வீட்டில் உள்ள கிழிந்த துணிகளை கொண்டே செய்யலாம்.
÷இதன் மூலம் 60 சதவீதம் கொசுக்களை ஒழிக்க முடியும். வாய்க்கால்கள் தூர் வாரப்படுவதால், நீர் தேங்காமல் செல்லும். இதனால் 30 சதவீதம் கொசுக்கள் உருவாவது தடுக்கப்படும். குடிநீரில் கொசுக்கள் உருவாவதை தடுக்க கம்பூசியா மீன் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட உள்ளது.
÷இவை அனைத்தும் மோதிலால் நேரு நகரில் பரிசோதனை செய்து, அதன் முடிவை பொருத்து, உழவர்கரை நகராட்சி முழுவதும் செயல்படுத்தி கொசுக்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்றார்