தினமலர் 09.02.2010
1.50 லட்சம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
நாமக்கல்: மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த சொட்டு மருந்து வழங்கும் முகாமில், மாவட்டம் முழுவதும் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இதற்காக கிராமப் பகுதியில் 1,068 முகாம்கள், நகர பகுதியில் 87 முகாம் என மொத்தம் 1,155 முகாம் அமைக்கப்பட்டது.
பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை என மொத்தம் 4,800 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன், கோவில் வளாகம் மற்றும் தியேட்டர்களில் இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 102 நடமாடும் சொட்டு மருந்து குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக பிற துறையை சார்ந்த 109 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடந்த முகாமில் 1.50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 1ம் தேதி நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 296 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.