தினமலர் 11.02.2010
கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம்
கடையநல்லூர் : கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காய்ச்சல் பரவி வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையில் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டி அமைந்துள்ள பாப்பான் கால்வாய் பகுதியில் கடுமையான சுகாதார கேடு நிலவி வருவதாக கூறப்பட்டதை அடுத்து பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியினை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏவிஎம் சர்வீஸ் பாயிண்ட் தனியார் நிறுவனம் மூலம் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு 30 பணியாளர்களை வைத்து கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இப்பகுதியில் அமைந்திருந்த முள் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கான பணியினை நகராட்சி தலைவர் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
பொதுமக்கள் பாப்பான் கால்வாய் மற்றும் சீவலன் கால்வாய் பகுதிகளில் குப்பைகள் மற்றும் மலங்களை விடாமல் இருக்கவும், குப்பைகளை கொட்டாமல் இருக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.